புத்தானுஸ்ஸதி தியானம்  (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்)

இந்த மனித வாழ்வினை அர்த்தமுள்ளதாக்குவதற்காக இவ்வுலகில் தோன்றியவர்தான் ‘சித்தார்த்த கௌதம புத்த பகவான்’ புத்த பகவானை பற்றி நீங்கள் சிறிது நேரமேனும்  நினைப்பீர்களாயின் அவ்வாறு நினைக்கும் போது உங்கள் மனதில் புத்தானுஸ்ஸதி எனும் தியானமே வளர்ச்சியுறுகிறது. புத்த பகவானது குணங்களை நினைக்கும் ஒவ்வொரு கணமும் மனம் தூய்மையடையும். மனம் அமைதி பெறும். இவ்வாறு மனம் ஒருங்கிணையும் போது, அமைதியுறும் போது நீங்கள் உங்களை அறியாமலேயே புதியதொரு வாழ்விற்காக அடியெடுத்து வைப்பீர்கள்.
புத்த பகவானிடம் மாசுகளற்ற தூய்மையானதொரு உள்ளம் இருந்தது. புத்த பகவானது உத்தம உள்ளம் நிரந்தரமாகவே பவித்திரமானதாகும். புத்த பகவான் எவ்வித காரணத்தை முன்னிட்டும் சிறிதளவேனும் சினங்கொள்ளவில்லை. எவ்வித காரணத்தினை முன்னிட்டும் கொடுமையானவராக மாறவில்லை. புற உலகின் மாயைகளுக்கு புத்த பகவான் வசியப்படவில்லை. புத்த பகவான் அரஹத் நிலையை அடைந்தவராவார். அதாவது அரஹங் எனும் குணம் படைத்தவராவார்.  இந்த குணத்தினை உங்களால் நினைவுகூற முடியுமாயின் தங்களது மனம் தூய்மையடையும். புத்த பகவான் இரகசியமாகவோ எவ்வித பாவமும் செய்யாதவராவார். அனைத்து கிலேசங்களிலிருந்தும் நீங்கியவராவார். அனைத்து துக்கங்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் நிரந்தரமாகவே நீங்கியவராவார். எவ்வித குரூபதேசமுமின்றி நாற்பேருண்மைகளை உய்த்தறிந்தவராவார். அனைத்து உலக தாதுக்கள், அனைத்து உயிரினங்கள், மற்றும் இந்த வாழ்க்கை தொடர்பாகவும் மீதமேதுமின்றி முழுமையாக உய்த்தறிந்தார். அறிவுள்ள அனைத்து தேவ மனிதர்களது பரம குருவானவராவார். இவ்வாறாக புத்த பகவானை உங்களால் நினைவுகூர முடியுமாயின் அந்த ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் நினைவுகூருவது  இந்த மனித வரலாற்றில் பொற்காலத்தை உருவாக்கிய உத்தம முனி ராஜனை பற்றியதாகும்.
தர்மத்தினூடாக புத்த பகவானை காணுங்கள்.
இவ்வாறான குணம் படைத்த புத்த பகவானை பற்றி நீங்கள் சிந்திப்பீர்களாயின் அக்கணம் முதல் உங்களது மனம் தூய்மை பெறும். புத்த பகவான் ஒருவர் இவ்வுலகில் மிகவும் அரிதாகவே தோன்றுவார்கள். அறிவினை விருத்தி செய்து கொள்ள விரும்பும் ஒருவரால்தான்; புத்த பகவான் ஒருவரை இணங்காண முடியும். புத்த பகவானது தர்மத்தினை செவிமடுத்து அறிவினை விருத்தி செய்வதனூடாக ஒருவரால் புத்த பகவானை காண முடியும். அப்போது புத்த பகவானை உங்களது வாழ்வினூடாக காண முடியும்.
புத்த பகவானது கிலேசமற்ற குணம், பரிபூரணமான ஞானம், மகா கருணை, பவித்திரமான உளச்சமாதி, வீரியம் மிகுந்த சுயசரிதை, எனும் இவ்வனைத்துமே உங்களது வாழ்வினை ஒளிமயமாக்கிக்கொள்வதற்கு உபகாரமாகும்.
புத்த பகவான் தொடர்பாக சிந்திக்கையில் அரஹங், சம்மா சம்புத்த, விஜ்ஜாசரண சம்பண்ண, சுகத, லோகவிதூ, சத்தா தேவ மனுஸ்ஸானங், புத்த, பகவா எனும் இவ்வனைத்து குணங்களையும் நினைவு கூருங்கள். அடிக்கடி இவ்வாறு நினைவு கூருங்கள்.
நாம் வாழும் இந்த மனித வாழ்வானது ஓடிக்கொண்டிருக்கும் சிறு நீரோட்டத்தை போன்றதாகும். வற்றிக்கொண்டு போகும் ஓடையை போன்றதாகும். இந்த மனித வாழ்வினை இழப்பதற்கு முன்னர் மனிதத்தன்மையுடன் நீங்கள் பெற்றுக்கொண்ட அறிவினையும் விருத்தி செய்யக்கூடிய அரிதான அதிஷ்டத்தினை இந்த புத்தானுஸ்ஸதி தியானத்தினால் நீங்களும் பெறலாம்.
சாது!. சாது!! சாது!!!
எனது சுவாமியான புத்த பகவான் கோபத்தை முழுமையாக நீக்கியவராவார், ஆசையினை முழுமையாக நீக்கியவராவார், அறியாமையை முழுமையாக நீக்கியவராவார். அனைத்து மனமாசுகளையும் அழித்தவராவார். இரகசியமாகக்கூட எவ்வித பாவமும் செய்யாதவராவார். அனைத்து உலகத்தோரினதும் பூஜைகளை ஏற்றுக்கொள்ள தகுதியானவராவார்.
புத்த பகவான் கண்ணினால் உருவத்தினை பார்த்து அந்த உருவத்தின் மீது ஆசை கொள்ளவில்லை. கோபமடையவில்லை, ஏமாறவில்லை.
புத்த பகவான் காதினால் சப்தத்தை செவிமடுத்து அந்த சப்தத்தின் மீது ஆசை கொள்ளவில்லை. கோபமடையவில்லை, ஏமாறவில்லை.
புத்த பகவான் நாசியினால் மணத்தை அறிந்து அந்த மணத்தின் மீது ஆசை கொள்ளவில்லை. கோபமடையவில்லை, ஏமாறவில்லை.
புத்த பகவான் நாவினால் சுவையை அறிந்து அந்த சுவையின் மீது ஆசை கொள்ளவில்லை. கோபமடையவில்லை, ஏமாறவில்லை.
புத்த பகவான் உடலினால் உடலுணர்வுகளை உணர்ந்து அந்த உடலுணர்வுகளின் மீது ஆசை கொள்ளவில்லை. கோபமடையவில்லை, ஏமாறவில்லை.
புத்த பகவான் மனதினால் சிந்தனைகள் செய்து அந்த சிந்தனைகள் மீது ஆசை கொள்ளவில்லை. கோபமடையவில்லை, ஏமாறவில்லை.
அந்த பாக்கியமுள்ள புத்த பகவான் அனைத்து மனமாசுகளையும் நீக்கி மனதினை முழுமையாக தூய்மைபடுத்தியவராவார். புத்த பகவான் அரஹங் குணம் படைத்தவராவார். அரஹங் குணம் படைத்தவராவார். அரஹங் குணம் படைத்தவராவார்.
எனது சுவாமியான பாக்கியமுள்ள புத்த பகவான் உய்த்துணர வேண்டிய துக்கம் எனும் ஆரிய சத்தியத்தினை எவ்வித குரூபதேசமுமின்றி முழுமையாக உய்த்துணர்ந்தார். நீக்க வேண்டிய துக்க தோற்றம் எனும் ஆரிய சத்தியத்தினை எவ்வித குரூபதேசமுமின்றி முழுமையாக நீக்கியவராவார். சாட்சாத் செய்ய வேண்டிய துக்க நிவாரணியாகிய உன்னத மோட்சம் எனும் ஆரிய சத்தியத்தினை எவ்வித குரூபதேசமுமின்றி முழுமையாக உறுதி செய்தவராவார். மேன்மை செய்ய வேண்டிய துக்க நிவாரண மார்க்கம் எனும் ஆரிய சத்தியத்தினை எவ்வித குரூபதேசமுமின்றி முழுமையாக மேன்மை செய்தவராவார். இந்த சதுரார்ய சத்தியத்தினை சத்ய ஞானம், க்ருத்ய ஞானம், க்ருதக் ஞானம் என மூன்று வகைகளாலும் பன்னிரென்டு முறைகளாகவும் எவ்வித குரூபதேசமுமின்றி முழுமையாக உய்த்துணர்ந்ததால் சம்மா சம்புத்த எனும் குணம் படைத்தவராவார். சம்மா சம்புத்த குணம் படைத்தவராவார். சம்மா சம்புத்த குணம் படைத்தவராவார்.
எனது சுவாமியான பாக்கிமுள்ள புத்த பகவான். வானில் நடத்தல் நிலத்தில் புகுந்து வேரிடத்தில் தோன்றல், நீரில் நடத்தல், அனைத்தையும் ஊடுருவி பயணித்தல் போன்ற எண்ணிலடங்காத இர்தி ஞானங்களை உடையவராhர். சேய்மையில் இருக்கும் உருவங்களையும் அண்மையில் இருக்கும் உருவங்களையும் காணக்கூடிய திப்ப சக்கு ஞானத்தை உடையவராவார். சேய்மையில் ஒலிக்கும் சப்தங்களையும் அண்மையில் ஒலிக்கும் சப்தங்களையும் கேட்கக்கூடிய திப்ப சோத்த ஞானத்தினை உடையவராவார். அனைத்து உயிரினங்களினதும் வரையறயற்ற முற்பிறவிகளை காணக்கூடிய புப்பேநிவாச ஞானத்தினை உடையவராவார். அனைத்து உயிரினங்களும் மரணிப்பதனையும் மரணித்து மீண்டும் கர்மத்தின்படி பிறத்தலையும் காணக்கூடிய சுதூபபாத ஞானத்தினை உடையவராவார். அனைத்து கிலேசங்களையும் முழுமையாக அழித்து மெய்ஞான ஒளியினை தன்னுள்ளே தோற்றுவித்து கொண்ட பகவான் ஆசவக்கய ஞானத்தினை உடையவராவர்.
இவ்வாறாக ஒப்பற்ற சீலங்களையும், நிகரற்ற உளச்சமாதியினையும், எல்லையற்ற ஞானத்தினையும் உடைய புத்த பகவான் விஜ்ஜாசரண சம்பண்ண குணம் படைத்தவராவார். விஜ்ஜாசரண சம்பண்ண குணம் படைத்தவராவார். விஜ்ஜாசரண சம்பண்ண குணம் படைத்தவராவார்.
எனது சுவாமியான பாக்கியமுள்ள புத்த பகவான் சுந்தரமான மோட்சத்தினை அடையும் வழியை அறந்து அவ்வழியில் பயணம் செய்து மோட்சத்தினை உறுதி செய்ததால் சுகத எனும் குணம் படைத்தவராவார். சுகத எனும் குணம் படைத்தவராவார். சுகத எனும் குணம் படைத்தவராவார்.
எனது சுவாமியான பாக்கியமுள்ள புத்த பகவான் அனைத்து பிரம்ம உலகங்கள், அனைத்து திவ்விய உலகங்கள், இந்த மனித உலகம், சகல பிசாசு உலகங்கள் உட்பட்ட நால்வகை நரகங்கள் எனும் எல்லா உலகங்களையும் உய்த்தறிந்து அவ்வுலகங்களிலிருந்து விடுதலையடைந்தவராவார். லோகவிதூ எனும் குணம் படைத்தவராவார். லோகவிதூ எனும் குணம் படைத்தவராவார். லோகவிதூ எனும் குணம் படைத்தவராவார்.
எனது சுவாமியான புத்த பகவான் இர்திவித ஞானத்தினாலும் , ஏனையோரது மனதையறிநது தர்மத்தினை உபதேசிக்கும் ஆதேசனா ஞானத்தினாலும், மற்றும் அனுசாசனா பிரார்த்திஹார்யத்தினாலும் கீழ்படிவற்ற தேவ மனிதர்களை கட்டுப்படுத்தி தர்மத்திற்கு கீழ்படியச்செய்து மோட்சத்திற்காக வழிகாட்டடியவாராவார். புத்த பகவான் அனுத்தரோ புரிசதம்ம சாரதீ எனும் குணம் படைத்தவாராவார். அனுத்தரோ புரிசதம்ம சாரதீ எனும் குணம் படைத்தவாராவார். அனுத்தரோ புரிசதம்ம சாரதீ எனும் குணம் படைத்தவாராவார்.
எனது சுவாமியான பாக்கியமுள்ள புத்த பகவான் அறிவுள்ள தேவ மனிதர்களுக்கு சன்சாரத்திலிருந்து விடுதலை  அடைவதற்கான மார்க்கத்த்தினை காண்பித்தவராவார்.. அறிவுள்ள தேவ மனிதர்களின் பரம குருவானவராவார். சத்தா தேவமனுஸ்ஸானங் குணம் படைத்தவராவார். சத்தா தேவமனுஸ்ஸானங் குணம் படைத்தவராவார். சத்தா தேவமனுஸ்ஸானங் குணம் படைத்தவராவார்.
எனது சுவாமியான பாக்கியமுள்ள புத்த பகவான் தன்னால் சயமாக உய்த்தறியப்பட்ட நால்வகை பேருண்மைகளை ஏனையோரும் உய்த்தறிந்து வீடுபேறு அடையும் பொருட்டு மிகவும் தெளிவாக, சுந்தரமானதாக, தெளிவான சொற்பிரயோகங்கள் தெளிவான அர்த்தங்களுடனும் ஏனையோருக்கு உபதேசித்ததால் புத்த எனும் குணம் படைத்தவராவார். புத்த எனும் குணம் படைத்தவராவார், புத்த எனும் குணம் படைத்தவராவார்
எனது சுவாமியான புத்த பகவான் இவ்வனைத்து சம்புத்த குணங்களையும் தன்னுள்ளே தாங்கிக்கொள்வதற்கு பாக்கியமுள்ளவராவார். சூரிய சந்திரனின் ஒளியை மிஞ்சும் எல்லையற்ற ஞான ஒளியை தன்னுள்ளே தோற்றுவித்து கொள்ளும் அளவிற்கு பாக்கியம் உள்ளவராவார். மகா கருணையினால் சதா குளிர்ச்சியடைந்த மனதினை கொண்டு வாழ்ந்த புத்த பகவான் பாக்கியமுள்ளவராவார். அனைத்து உத்தம குணங்களையும் ஒருங்கே தன்னுள் தாங்கிக்கொண்ட புத்த பகவான் பாக்கியமுள்ளவராவார் புத்த பகவான் பகவா எனும் குணம் படைத்தவராவார். புத்த பகவான் பகவா எனும் குணம் படைத்தவராவார். புத்த பகவான் பகவா எனும் குணம் படைத்தவராவார்.
புத்த பகவானது குணங்களுக்கு எல்லைகளே இல்லை.எல்லைகளற்ற உத்தம குணங்களையும், வரையறையற்ற ஞானத்தினையும்  கொண்டு மகா கருணையினால் குளிர்ந்த மனதினை உடையவாராக தரித்திருந்த புத்த பகவானுக்கு நான் நமஸ்கரிக்கிறேன். எனது கௌரவமிகு நமஸ்காரமாகட்டும்.
நன்று! நன்று!! நன்று!!!

What is Meditaion