தம்மபதம்

எமது பரம குருவான பாக்கியமுள்ள புத்த பகவான் எம் மீது கொண்ட மகா கருணையினாலேயே இந்த உத்தம
தர்மத்தினை மொழிந்தருளினார். அந்த மகா வழிகாட்டியின் சாசனமாகவே இந்த தர்மம் விளங்குகிறது. சுத்த (சூத்திர
போதனைகள்), கெய்ய (போதனை மற்றும் செய்யுள் எனும் இரண்டும் உள்ளடங்கியவை), வெய்யாகரண (ஆரிய
சத்தியங்களை மென்மேலும் பகுத்து மொழிந்திருக்கும் போதனைகள்), காதா (செய்யுள்கள்), உதான (முயற்சியின்றி
சுயமாக உதிரும் வார்த்தைகள்), இதிவுத்தக (நிச்சயப்படுத்தி மொழிந்த போதனைகள்), ஜாதக (பகவானது முற்பிறப்பு
வரலாறுகள்), அப்பூததம்ம (ஆச்சரியமிக்க புதினமான விடயங்கள் கொண்ட பகுதி), வேதள்ள (வினா விடை
வடிவிலானவை) என இந்த மகா வழிகாட்டியின் சாசனம் ஒன்பது அங்கங்களை உடையதாக திகழ்கிறது.

தம்ம பதம் ‘காதா’ எனும் செய்யுள் வடிவிலான சாசனத்திற்கு உட்பட்டதாகும். இந்த உத்தம செய்யுள்களை மகா
வழிகாட்டியின் சாசனம் என்றழைப்பதற்கு காரணம் இந்தச் செய்யுள்களில் பொதிந்திருக்கும் விசேடமான
இயல்புகளினாலேயே. அதாவது, இந்த உத்தம செய்யுள்களின் பொருளை உணர்ந்து அதன்படி தமது வாழ்வினை
நல்வழிப்படுத்திக்கொள்ளும் ஓர் ஆரிய சீடனாலேயே இந்தத் துன்பப்பெருங்கடலான பிறப்பு இறப்பிலிருந்து மீண்டு
உன்னத மோட்சத்தினை உறுதி செய்ய முடியும். ஒரு சமயம் சஹம்பதீ எனும் மகா பிரம்மராஜன் பாக்கியமுள்ள
பகவான் முன் தோன்றி பாக்கியமுள்ள புத்த பகவானையும், பகவானது உத்தம தர்மத்தினையும், பகவானது ஆரிய
சங்கையரையும் புகழ்ந்து சில செய்யுள்களை உரைத்தார். அதன் ஒரு செய்யுளில் இவ்வாறு கூறப்படுகிறது.

”ஏகஸ்மிங் ப்ரஹ்மசரியஸ்மிங் – சஹஸ்ஸங் மச்சு ஹாயினங்”
”ஒரு தம்ம பதத்தில் மாறனை வென்று இருக்கும் ஆயிரம்
அரஹத் தேரர்கள் வீற்றிருக்கிறார்கள்”
(சம்யுக்த நிகாயம் 01)

அந்த உத்தம தம்மபதத்தினை வகைகளின் அடிப்படையில் இங்கு ஒலிவடிவமாக வழங்கியுள்ளோம். தர்மச்சுவையை உணர விரும்புபவர்கள் இந்த தர்மத்தினை செவிசாய்த்து கேட்பீராக!

இரு செய்யுள்களை கொண்ட பகுதி

யமக வர்க்கம், இருபது செய்யுள்களை கொண்டதாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் புத்த பகவான் மொழிந்தருளிய
இரு சோடிகளுடன் கூடிய செய்யுள்களே இப்பகுதியில்

உள்ளடங்குகின்றன. யமக என்றால் சோடி என்பதாகும்.
இதன்பால் மனம், வாழ்க்கை, தர்ம மார்க்கம், என்பன தொடர்பாகவுள்ள
அர்த்தம் நிறைந்த விடயங்கள் உள்ளடங்குகின்றன.
தம்ம பதம் இந்த யமக வர்க்கத்தினூடாகவே ஆரம்பமாகிறது.

தாமதமின்மை தொடர்பாக மொழிந்த பகுதி

இரண்டாவது வகை ‘அப்பமாத’ வகையாகும். அப்பமாத
என்றால் தாமதமின்மையாகும். அதாவது ஒருவர் குசல
தர்மதங்களை தோற்றுவித்துக் கொள்வதற்கு இருக்க

வேண்டிய அவசரமாகும். அகுசலங்களை அழித்துக்கொண்டு
குசல தர்மங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒருவர் வீரியம்
செய்வது இந்தத் தாமதமின்மை எனும் குணத்தினாலேயே.
புத்த பகவான்மார்கள் எப்போதும் தாமதமின்மை எனும்
குணத்தினை மிகவும் வர்ணித்தார்கள். தாமதத்தின்
தீமையையும் தாமதமின்மையின் நன்மையையும் எமது
புத்த பகவான் மிகவும் சுந்தரமான முறையில் எடுத்தியம்பும்
விதத்தினை நாம் இந்த ‘அப்பமாத’ எனும் பகுதியின் மூலம்
உணர்ந்துகொள்ளலாம். இங்கு பன்னிரண்டு செய்யுள்கள்
இருக்கின்றன.

உள்ளம் தொடர்பாக மொழிந்த பகுதி

மனம் தொடர்பான அபூர்வ விடயங்களை நீங்கள் மூன்றாம்
பகுதிக்குரிய ‘சித்த’ எனும் பிரிவின் மூலம் அறிந்துகொள்ள
முடியும். இது பதினொரு செய்யுள்களைக் கொண்டது.

தவறான பாதையில் செல்லும் மனதின் அபாயமும் இவ்வாறாக தவறான
பாதையில் பயணிக்கும் மனதினை நல்வழிப்படுத்துவதால்
கிடைக்கும் மன நிம்மதியையும் புத்த பகவான் மிக மிக
இனிமையான முறையில் மொழிந்தருளியுள்ளார். தேன்
நிறைந்த பொற்கலனைப் போன்ற இந்தப் பகுதி தம்ம
பதத்தின் மூன்றாம் பகுதிக்குரியதாகும்.

மலர்களை உவமைப்படுத்தி   மொழிந்த பகுதி

நான்காவது பகுதி ‘புஷ்ப’ வகையாகும். பூக்களை
உவமைப்படுத்தி பகவான் மொழிந்தருளிய பதினாறு
செய்யுள்களை தர்மச்சுவை நனிச்சொட்ட சொட்ட கேட்கும்

பாக்கியம் உங்களுக்கு இந்த பகுதியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அஞ்ஞான பாலன் தொடர்பாக மொழிந்த பகுதி

அடுத்தது ‘பால’ வகையாகும். இங்கு பாலகன் எனக்
குறிப்பிடப்படுவது சிறு குழந்தையை அல்ல. பகவானது
தர்மத்தில் பாலகன் எனக்கூறப்படுபவன்,

புண்ணிய பாவங்களை அறியாத, சத்புருஷ அசத்புருஷர்களை
அறியாத, சரியான பாதை பிழையான பாதை அறியாத,
சரியான பார்வை (சம்மா திட்டி), தவறான பார்வை (மிச்சா
திட்டி) அறியாத புதுஜ்ஜனனாவான். இந்த பால குணம்
கொண்டவனது ஞானமற்ற மன இயல்பும், அகங்காரமும்,
கொடிய தன்மையையும் பற்றி இந்த பகுதியை வாசிப்பதன்
மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பண்டிதன் தொடர்பாக மொழிந்த பகுதி

மகா அரஹத் தேரர்கள் இந்த கீழ்த்தரமான பால குணம்
கொண்டவர்களை பற்றி கூறி முடித்த பின்னர் இடம்பெறும்
அடுத்த பகுதியில் மகா உன்னத குணங்களை கொண்ட

பண்டிதரைப் பற்றியுள்ள பண்டித வகையினை தம்ம
பதத்தினுள் இணைத்துள்ளனர். ஆறாவது வகையான
இந்த பண்டித வர்க்கத்தினுள் பதினாறு செய்யுள்கள்
உள்ளடங்குகின்றன. இங்கு பண்டிதர் எனப்படுபவர் பட்டம்
பெற்றவரோ அல்லது வேறு வேறு மகா விருதுகளைப்
பெற்றவரோ அல்லர். தர்மத்தில் பண்டிதர் என்பது
கிலேசங்களை அழித்து முழுத்தூய்மை பெற்ற அரஹத்
தேரரை குறிப்பிடும் இன்னுமொரு பெயராகும். பிரக்ஞை
(ஞானம்) படைத்த மகா உத்தமர்களது குணவியல்புகளும்,
அவ்வாறான உத்தமர்களுடன் பழகுவதன் மகிமையையும்
எடுத்துக் கூறும் இந்தப் பண்டித வகையினை பகவான்
அழகுடன் எடுத்தியம்பியுள்ள முறை அபூர்வமே!

அரஹத் உத்தமர்கள் தொடர்பாக மொழிந்த பகுதி

மனக்கிலேசங்களை வேரறுத்த மகா சுந்தர குணங்கள்
கொண்ட உத்தமர்களை பற்றிக் கூறப்படும் பத்துச்
செய்யுள்களைக் கொண்டிருக்கும் ‘அரஹன்தக’

வகையே ஏழாவது வகையாகும். இவ்வாறான யுகத்தில் கூட
மகா மோட்சத்தினை உறுதி செய்ய அரஹத் தேரர்களது
இயல்பினை அறியக்கிடைப்பது எமது பாக்கியமே

ஆயிரம் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொழிந்த பகுதி

ஆயிரம் என்றவகையில் விடயங்கள் விபரிக்கப்படும்
பதினாறு செய்யுள்கள் கொண்டதே ‘சஹஸ்ஸ’ வகையாகும்.
அதுபோன்று நூறு என்ற எண்ணிக்கை அடிப்படையிலான

தர்ம விடயங்களும் இங்கு உள்ளடங்குகின்றன. ஒருவருக்கு
தர்மத்தின் படி வாழும் வாழ்வின் பெறுமதியை உணர்வதற்கு
இப் பகுதியே போதுமானதமாக அமையலாம்.

பாவங்கள் தொடர்பாக மொழிந்த பகுதி

‘பாவம்’ என்பது விலக்கி வைக்க வேண்டியதொன்றாகும்.
எல்லா பாவங்களில் இருந்தும் நீங்குவதற்காகவே அனைத்து
புத்தர்மார்களும் தர்மத்தினைப் போதித்தார்கள். பாவத்தின்

இயல்பு, அஞ்ஞான மூட மாந்தர்கள் பாவத்தினை விரும்பும்
விதம், அதன் கொடிய விளைவுகள் என்பன மிகவும்
தெளிவாக பகவானால் மொழியப்பட்ட பகுதியே ஒன்பதாம்
பகுதிக்குரிய ‘பாவ’ வகையாகும்

தண்டனைகள் தொடர்பாக மொழிந்த பகுதி

அடுத்தது ‘தண்ட’ பகுதியாகும். தண்ட என்றால்
தண்டனையாகும். துன்புறுத்தப் பயன்படுத்தும் கம்பு, கட்டை
என்பவையும் தண்ட என்றே அழைக்கப்படும். ஞானமற்ற

மூடன் நரகத்தின் பிறப்பு வரை தண்டனைகள் பெறும்
விதமும் அனைத்துப் பாவங்களில் இருந்து நீங்கும் பிக்கு
மோட்சத்தினால் நிம்மதியடையும் விதமும் பதினேழு
செய்யுள்களைக் கொண்ட இந்த பகுதியின் மூலம் நன்கு
உணர்ந்து கொள்ள முடியும்.